ஆளில்லா விமானம் மூலம் மனித ரத்தம் வினியோகம்

அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் மனித ரத்தம் வினியோகம் செய்யப்பட்டது. இந்த விமானங்கள் ரிமோட்கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது.
எதிரி நாடுகளின் நிலைகளை உளவு பார்க்கவும், தீவிரவாதிகளை குண்டு வீசி அழிக்கவும் ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லாமல் தானாக இயங்கும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அதை தொடர்ந்து நீண்ட தூரங்களுக்கு பீட்சா மற்றும் மளிகை சாமான்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்ய அவை உபயோகப்படுத்தப்பட்டன.

தற்போது மனிதர்களின் உயிர்காக்கும் ரத்தத்தை சுமந்து சென்று பத்திரமாக சேர்க்கும் பணியை ஆளில்லா விமானங்கள் செய்து வருகின்றன. போக்குவரத்து வசதி எதுவும் இல்லாத மிகவும் உள்ளடங்கிய கிராம பகுதிகளுக்கு மனிதர்களின் உயிர்காக்கும் ரத்தத்தை அவை சுமந்து செல்கின்றன.

இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் இடையூறு இன்றி மிக விரைவாக ரத்தம் கிடைத்து மனித உயிர்கள் காக்கப்படுகின்றன. இதற்கான சோதனை ஓட்டம் அமெரிக்காவில் சமீபத்தில் நடந்தது.

அதில், ஜான்ஸ் ஹோப் கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஈடுபட்டனர். இக்குழுவினர் 6 யூனிட் ரத்த சிவப்பணுக்கள், 6 யூனிட் பிளேட் வெட்ஸ் எனப்படும் ரத்த வட்டுகள் உள்ளிட்ட ரத்தம் சம்பந்தப்பட்ட பொருட்கள் ஆளில்லா விமானம் மூலம் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டன.

இவை கெட்டுப் போகாமல் இருக்க ஆளில்லா விமானத்தில் குளிர் சாதன கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் ரிமோட்கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது.

13 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் இயக்கி பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவை தரையில் இருந்து 328 அடி உயரத்தில் பறந்து சென்றன. இவை 26.5 நிமிடங்களில் குறிப்பிட்ட தூரத்தை கடந்து சென்றன.