திருமணத்தின் பின்னரும் நடிகைகள் நடிக்கும் வழக்கம் பொலிவூட்டில் உள்ளது – கஜோல்

பொலிவூட் நடிகை ஒருவருக்கு திருமணமாகிவிட்டது என்றால் அவரின் நடிப்புத்துறை வாழ்க்கை முடிவடைந்துவிட்டது என அர்த்தமல்ல.முந்தைய காலத்திலிருந்து இந்த நிலை இருந்தது என நடிகை கஜோல் கூறியுள்ளார்.

திருமணமான பின்னரும் திரைப்படங்களில் தான் நடிப்பது குறித்து செவ்வியொன்றில் கேட்கப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,  திருமணமான நடிகைகள் நீண்ட காலமாக பொலிவூட்டில் நடித்து வந்துள்ளனர்.

யாரும் அவர்களிடம் சென்று, உங்களுக்குத் திருமணமாகிவிட்டது. இன்னும் நீங்கள் பணியாற்றுகிறீர்கள் எனக் கூறியதில்லை எனத் தெரிவித்துள்ளார். 42 வயதான கஜோல் 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்தவர். இத்தம்பதிக்கு 13 வயதான மகளும் 6 வயதான மகனும் உள்ளனர்.

இறுதியாக ஷாருக் கானுடன் கஜோல் இணைந்த நடித்த தில்வாலே திரைப்படம் கடந்த வருடம் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் சர்மிளா தாகூர், எனது தாயார் (தனுஜா), சாய்ரா பானு என பல நடிகைகள் திருமணத்தின் பின்னரும் நடித்தனர்.

அதேவேளை வேறு சிலர் திருமணத்தின் பின்னர் நடிக்காமலும் உள்ளனர். சிலர் தமது திருமணத்துக்கு முன்னர் நடித்ததைவிட திருமணத்தின் பின்னர் அதிக படங்களில் நடித்தனர். டிம்பிள் கபாடியாவும் அவர்களில் ஒருவர்.

எனவே, திருமணத்தின் பின்னரும் நடிக்கும் முதல் நடிகை நானல்ல. இப்போது என் மீது குவியும் கவனம் காரணமாக இவ்வாறு கருதப்படலாம் எனவும் கஜோல் தெரிவித்துள்ளார்.