50 யாஹூ கோடி பயனாளிகளின் ரகசிய தகவல்கள் திருட்டு

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் யாஹூ பயனாளிகளின் கடவுச்சொல் மற்றும் இதர முக்கிய ரகசியங்கள் ஹேக்கர்களால் களவாடப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகளின் சதி மறைந்துள்ளதாக யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையதள தேடுபொறிகளில் ஜாம்பவானான ’யாஹூ’வை பயன்படுத்திவந்த சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களின் கடவுச்சொல் மற்றும் இதர முக்கிய ரகசியங்கள் கடந்த 2014-ம் ஆண்டு ’ஹேக்கர்’ எனப்படும் இணையதள ஊடுருவலாளர்களால் களவாடப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக கடவுச்சொற்களை மாற்றியமைத்துக் கொள்ளும்படி யாஹூ நிறுவனம் அறிவித்தது. இந்த ஊடுருவல் தொடர்பாக புலனாய்வு விசாரணையிலும் அந்நிறுவனம் ஈடுபட்டு வந்தது, இந்நிலையில், முக்கிய ரகசியங்கள் ஹேக்கர்களால் களவாடப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகளின் சதி மறைந்துள்ளதாக அந்நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஆன்லைன் தொழில்நுட்பத்துறையில் வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் ஊடுருவல் மற்றும் தகவல் திருட்டுகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இதன் அடிப்படையில், யாஹூ போன்ற நிறுவனங்கள் தங்களது பயனாளிகளின் கணக்குகளை வெளிநாடுகளை சேர்ந்த சில சக்திகள் குறிவைப்பது தெரியவந்தால், அதுதொடர்பாக உடனுக்குடன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் புதிய புரோக்ராம்களை உருவாக்கியுள்ளன.

தங்களது ஆன்லைன் கணக்கு தொடர்பான விபரங்கள் பிறரால் நோட்டம் பார்க்கப்படுவதாகவோ, களவாடப்பட வாய்ப்புள்ளதாகவோ கருதும் நபர்கள் உடனடியாக தங்களது கடவுச்சொல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கேள்வி-பதில்களை (security question information) மாற்றிக் கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.