எம்மை பிரித்து, கட்சியை வளர்க்கவே வந்தார் ரணில்!! – விக்கி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியை வளர்க்கவும் நிலைநாட்டவுமே இங்கு வந்தார். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

இது முற்றிலும் ஓர் அரசியல் ரீதியான பயணம். எனவே நான் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமரின் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. அவர் ராணுவத்தினரை படிப்படியாக வெளியேற்றுவேன் என உத்தரவாதம் தந்தால் நான் அவருடன் கைகுலுக்குவேன். –

இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

இன்று வியாழக்கிழமை (02-04-2015) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழாவில் இணை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:- இன்று நான் கொழும்பு செல்ல வேண்டியிருந்தது.

ஜனாதிபதியுடன் சம்பந்தன் அவர்கள் ஒரு கூட்டத்தைக் கூட்டி என்னையும் டெனீஸ்வரனையும் கடற்றொழிலாளர்கள் பிரச்சினை பற்றி கருத்துக்கள் வழங்குமாறு கோரியிருந்தார். நான் ஏற்கனவே ஜனாதிபதி இந்தியா செல்ல முன் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் பற்றி என் கருத்துக்களைக் கூறியிருந்ததாலும், இன்று இங்கு வைத்திய கலாநிதி இராஜித சேனாரத்ன வருகை தருவதாக இருந்ததாலும் டெனீஸ்வரனை அங்கு போகுமாறு கோரி நான் இங்கு வந்துள்ளேன்.

எமது பிரச்சினைகளை ஓரளவு தெரிந்து வைத்து எமக்காகக் குரல் கொடுப்பவர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன அவர்கள். இந்தத் தருணத்தில் எம்முடன் சேர்ந்து இந்த நிகழ்வில் அவர் கலந்து கொள்வதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். முல்லைதீவு மாவட்ட மக்களின் நலனை எமது முன்னுரிமை கொடுக்க வேண்டிய ஒரு விடயமாக நினைத்து எமது கடமைகளை ஆற்றி வருகின்றோம்.

எம்மால் பணம் செலவழித்துக் கட்டமுடியாவிட்டாலும் யுஅநசiஉயசநள நிறுவனம் தமது செலவில் கட்டித்தந்துள்ள இந்த சத்திரசிகிச்சைத் தொகுதி, இரத்த வங்கி ஆகியவற்றைத் திறந்துவைத்தாவது எமது மகிழ்வையும் கரிசனையையும் உங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளோம். முன்னைய அரசாங்கத்திற்கு ஒரு சத்திர சிகிச்சை அளிக்க எமது ஜனாதிபதிக்கு உறுதுணையாக நிற்கின்றவர் கௌரவ அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன. அவர் முன்னைய அரசாங்கத்தின் நோயுற்ற பகுதிகளை வெட்டி சத்திர சிகிச்சை செய்து புதியதொரு அரசாங்கத்தை எமக்குத் தரப் படாதபாடு பட்டுள்ளார்.

அவருக்கு எமது நன்றிகள் உரித்தாகுக. இருப்பினும் அவரின் புதிய அரசாங்கத்தின் பிரதமருடன் எனக்கேன் வீண் விவாதம் என்று அவரும் நினைக்கக்கூடும். எனதருமை மக்களான நீங்களும் நினைக்கக்கூடும். வரமுன் காப்பவனே புத்திசாலி. வருவதை அறிந்து நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அது எம்மையே வருத்தும். என்னைப் பொறுத்தவரையில் இன்றே திரும்பவும் வீடு சென்று எனது ஓய்வினை மீண்டும் ஏற்றுவாழும் மனோநிலையில்தான் நான் இருக்கின்றேன்.

எதுவும் தேவையில்லை. ஆனால் பொறுப்புக்கள் தரப்பாட்டால் அவற்றைத் தட்டிக்களிக்க நான் தயாரில்லை. அண்மையில் பிரதமரின் விஜயம் பற்றி ஓர் அழைப்பிதழ் கிடைத்தது. அதை அனுப்பியவர் என்னைத் தெரிந்த திருமதி றோசி சேனாநாயக. திருமதி விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பின் பேரில் பிரதமர் வருகின்றார் என்றும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் என்னையும் பங்குபற்றுமாறு அழைக்கப்பட்டது.

என்னைப் பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகம் அழைக்கவில்லை. பிரதமர் தமது விஜயம் பற்றி எம்முடன் கலந்தாலோசிக்கவுமில்லை. அவர் சார்பான அழைப்பை விடுத்தது அவரின் கட்சியின் பிரமுகர் ஒருவர். கட்சியின் இன்னொருவரின் அழைப்பின் பேரிலேயே அவர் வருகை தந்தார்.

ஆக மொத்தம் இதன் அர்த்தம் என்ன? தமது கட்சியை இங்கு நிலைநாட்ட, அலுவலகங்களைத் திறந்து வைக்க, நேரடியாக மத்தியில் இருந்து மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுத்து இன்னாரை அண்டினீர்கள் ஆனால் உங்களுக்கு நாங்கள் சகல உதவிகளையும் பெற்றுக் கொடுப்போம் என்று கட்சி முறையாகக் கூறவே பிரதமர் இங்கு வருகை தந்தார்.

இது முற்றிலும் ஒரு அரசியல் ரீதியான பயணம். எனவே நான் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமரின் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. அவர் தமது கட்சியை வளர்க்க வந்தார். வளர்த்துவிட்டுப் போகட்டும். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை. 225 மக்கள் பிரதிநிதிகள் கொண்ட நாடாளுமன்றத்தில் இன்று 45 பிரதிநிதிகளை மட்டுமே கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிப் பலம் பெற்று ஆண்டு வருகின்றது.

அடுத்த பொதுத் தேர்தலில் தமக்கு என்ன கிடைக்குமோ என்ற பயம் உள்ளூரப் பிரதமரை வருத்திக் கொண்டுதான் இருக்கும். அதனால்தான் வடமாகாணத்தில் எப்படியாவது காலடி ஊன்ற அவர் பல நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். ஒரு பிரதமரை அண்டினால் பல நன்மைகள் பெறலாம் என்பது எனக்குத் தெரிந்த விடயம்தான். ஆனால் அடுத்த பொதுத் தேர்தலில் என்ன நடக்கப் போகின்றது என்பதை அறியாது வடமாகாணத்தில் எம் மக்களின் செல்வாக்கைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த அவர் விழையும் போது அதனை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதும் எனது கடப்பாடுதான். இதிலே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை.

வடமாகாணத்தில் தமது கட்சியை நிலை நாட்ட பிரதமர் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளார் என்பது கண்கூடு. மக்களால் பெருவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் புறக்கணித்துத் தனது கட்சியின் சிலரை முன்வைத்தே தமது அரசியலைக் கொண்டு நடத்துவதற்கு எத்தனிக்கின்றார் என்பதும் கண்கூடு. அடுத்த கட்டமாக இதைத்தரமாட்டேன். அதைத் தருவேன் என்று எங்களுக்கு அரசியல் ரீதியாகப் பிரச்சினைகளை உண்டாக்கப் போவதும் நான் அறிந்ததே.

அதாவது எங்களுடன் சேர்ந்தால் உங்களுக்குச் சகல நன்மைகளும் கிடைக்கும். சேராவிட்டால் நீங்கள் எங்களைப் புறக்கணித்தவர்கள் ஆவீர்கள். அதன் தாக்கத்தை நீங்கள் ஏற்கச் சித்தமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை எமக்கு உணர்த்த முன் வருவார் என்பதும் நான் தெரிந்த ஒன்றே. இதுதான் கடந்த காலங்களில் நடந்த திருவிளையாடல்கள் ஆகவே உண்மைகளை எடுத்துக் கூறுவது, எங்கள் மக்களுக்கு விசுவாசமாக நாங்கள் நடந்து கொள்வது ஆகியன எந்தக் காலத்திலும் பிழையெனக் கொள்ள முடியாது.

நான் என் சொந்த நன்மை கருதியோ, சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் கொடுத்தோ முரண் நடவடிக்கைளில் ஈடுபடவில்லை. எமது முரண்பாடானது வடமாகாணத்தில் இருந்து இராணுவ முகாம் ஒன்றைத்தானும் அகற்ற முடியாது என்று கௌரவ அமைச்சர் ஒருவர் கூறியதில் இருந்தே தொடங்கியது. ஒருசில கேந்திரஸ்தானங்கள் தவிர மற்றைய இடங்களில் இருக்கும் இராணுவத்தினரைப் படிப்படியாக ஒரு குறிப்பிட் கால எல்லைக்குள் வெளியே அனுப்புவேன் என்று பிரதமர் தரமான ஓர் உத்தரவாதத்தைத் தரட்டும்.

உடனே அவருடன் கைகுலுக்குவேன். இராணுவ முகாம் ஒன்றைத்தானும் வெளியேற்றாமல், வலி வடக்கில் உறுதியளித்த ஆயிரம் ஏக்கர்களில் 400 ஏக்கரை மட்டும் விடுவித்து விட்டு அரசியல் ரீதியாகத் தமக்கு இலாபம் தேடும் பிரதமருடன் நான் எவ்வாறு கைகுலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவிப்பது? எமது மக்கள் எங்களை மாகாண ஆட்சிபீடம் ஏற்றியது சில காரணங்களை முன்வைத்து. அவை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.

இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு. போர் முடிந்த பின்னர் அவர்களுக்கு வடமாகாணத்தில் எந்த வேலையும் இல்லை. வேண்டுமெனில் பொலிஸாரின் தொகையைக் கூட்டட்டும். ஆனால் இராணுவத்தினர் மக்களின் காணிகளை மீளளித்து மக்கள் மத்தியில் இருந்து வெளியேற வேண்டும். இவ்வாறான முக்கிய விடயங்களை நாங்கள் அறுதியிறுதியாகப் பேசித் தீர்த்துக் கொள்ளாவிடில் பாதிக்கப்படப்போவது நாங்களே. பிரதமரின் செயலால் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் எமது வடமாகாண சபைக்கிருக்கும் மிக நலிந்த மெலிந்த அதிகாரங்கள் பற்றிய உண்மைகள் வெளிவரத்தொடங்கியுள்ளன.

மத்தியால் எந்த அளவுக்கு மாகாணத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை எமக்குணர்த்தி வருகின்றார் பிரதமர். இதை அறியாமல் மத்தியின் மாய்மாலங்களுக்கு மண்டியிட முனைந்துள்ளோம் எம்முட்சிலர். இதிலே எமது மக்களின் உரித்துக்கள் அடங்கியுள்ளன. இப்பேர்ப்பட்ட செயல்களை வெறும் மனித உறவுகளின் வெளிப்பாடு என்று கூறமுடியாது.

ஆழமாக அமைந்திருக்கும் பக்கச்சார்பான எண்ணங்களின் வெளிப்பாடுகள்என்றே கொள்ள வேண்டும். இதன் காரணத்தினால்தான் மக்களாகிய உங்களுக்கு முன்னர் நான் பலமுறை கூறியதை இன்றும் இங்கு கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

எனதருமை மக்களே!

மத்தியின் அரசாங்கம் தரும் அனைத்து நன்மைகளையும் இருகரம் நீட்டி வாங்கிக்கொள்ளுங்கள்!

அவர்கள் அழைக்கும் கூட்டங்களுக்குப் போய் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கேட்டுக் கொள்ளுங்கள்!

ஆனால் தேர்தல் காலம் வந்ததும் ஒரு வாக்கையாவது தேசியக் கட்சிகள் என்று தம்மை அடையாளப்படுத்தி வரும் கட்சிகளுக்குக் கொடுக்காதீர்கள். மத்தி எமக்கு நஷ்டஈடாகத் தரவேண்டிய கோடிகளில் மிகக்குறைந்த ஓர் அளவே அவர்கள் எமக்குத் தரப்பார்ப்பது. எமது காணிகள் விடுபடவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட எம்மக்களின் தேவைகள் பூர்த்திசெய்யப்படவில்லை.

பாரம்பரிய தொழில்களைச் செய்ய அனுமதி கிட்டவில்லை. போர்க்காலத்தில் வெளியில் இருந்து வந்தோர் வியாபாரங்களை விட்டுச் செல்லவில்லை. இராணுவத்தினர் தெற்கிலிருந்து மக்களைக் கொண்டுவந்து குடியேற்றும் நிலை நிறுத்தப்படவில்லை. காணிகளை இராணுவமும் அவர்களை அண்டியோரும் கபளீகரம் செய்வது நிறுத்தப்படவில்லை. எனவே இவற்றை எடுத்துக் கூற உங்களுக்கு எமது நிலையறிந்த மக்கட் பிரதிநிதிகளே மத்தியிலும் மாகாணத்திலும் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

நாங்கள் தேர்தலுக்கு முன்னமே சென்ற டிசெம்பர் 30ஆம் திகதியன்று அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்துடன் சேர்ந்து எவ்வாறு எமக்கு உதவி செய்யலாம் என்பது பற்றி உரிய ஆவணங்களை மூன்று தலைவர்களுக்கும் அனுப்பி வைத்திருந்தோம். எமது கோரிக்கைகளில் ஆளுநர், பிரதம செயலாளர், ஆகியோரை மாற்றியதைவிட அதுபற்றி வேறு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் எமக்கு சகல விதத்திலும் ஆதரவையும் அன்பையும் காட்டும் அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன போன்றவர்களுக்கு எமது நன்றியறிதல்களை எடுத்து இயம்புவோமாக! – என்றார் இந்த நிகழ்வில் யுஅநசiஉயசநள நிறுவனத்தின் அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிபர், வைத்திய அதிகாரிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர

Leave a Reply