மூன்று மாதம் போராடி தணிக்கை வாங்கிய உறுதிகொள் இயக்குனர்

உறுதிகொள் என்ற படத்தை இயக்கியுள்ள இயக்குனர் அய்யனார், இந்தப் படத்திற்கு மூன்று மாதம் போராடி தணிக்கை (சென்சார்) வாங்கியதாக கூறியிருக்கிறார்.

.பி.கே.பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள உறுதிகொள் திரைப்படம் அக்டோபர் 6 அன்று திரைக்கு வரவிருந்தது. ஜி.எஸ்.டி பிரச்சனையால் புதிய படம் வெளியிடக் கூடாது என்ற முடிவால் வெளிவரவில்லை. நவம்பர் 3 அன்று திரையிட்டுக் கொள்ளலாம் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்று திரைக்கு வருகிறது.

இது குறித்து படத்தின் இயக்குனர் அய்யனார் கூறும்போது, ‘சிறிய பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் எடுத்து ரிலீஸ் பண்ணுவது மிகப்பெரிய சவாலாக இன்றைக்கு இருக்கிறது. படத்தோட தலைப்பை “எதிர்கொள்” என்றுதான் பதிவு செய்தோம். எங்களுக்கும் டைட்டில் ரிஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ் குடுத்தாங்க. பப்ளிசிட்டி செய்து வரும்போது அதே தலைப்பை இன்னும் இரண்டு பேர் பதிவு செஞ்சிருக்கிறதா சொன்னாங்க, சரி நம்ம இவங்ககிட்ட போட்டி போட முடியாதுன்னு தலைப்பை “உறுதிகொள்” என்று மாற்றி பதிவு செய்தோம்.

ஒரு வழியா படத்தை முடிச்சி சென்சாருக்கு கொண்டுபோனா முதல் கமிட்டி படத்தை ரிஜெக்ட் பண்ணாங்க, வன்முறை மற்றும் ரேப் சீன் நிறைய இருக்குன்னு காரணம் சொன்னாங்க, நாங்களும் வாதிட்டோம். ரேப் சீன் படத்தில் காட்சியாக இல்லை, இன்றைக்கு பெண்களுக்கு எதிராக  நடக்குற கொடுமையை விளக்க கதையாகத்தான் சொல்லியிருக்கிறோம் என முறையிட்டோம்.

ரிவைஸ் கமிட்டியில் இரண்டு ஷாட் கட்டும் சில ஆடியோ கரக்சனோட U/A சான்றிதழ் கிடைத்தது. பெரிய படங்களுக்கு நிறைய மோசமான காட்சிகளை அனுமதிக்குற சென்சார் சின்ன படத்ததான் ரொம்பவும் குறிவைக்கிறாங்க. மூன்று மாதம் போராடி சென்சார் வாங்கினேன். அனைத்து தரப்பும் பார்க்கக்கூடிய படமாகத்தான் “உறுதிகொள்” உருவாகி இருக்கிறது’ என்றார்.