யாழில் குழந்தைகளுக்கு நஞ்சு ஊட்டி தானும் தற்கொலை செய்த தாய்!

1 கோடியே 17 லட்சம் ரூபா பணத்தினை வாங்கியவர்கள் ஏமாற்றியதனால் கணவன்  நஞ்சு  குடித்து தற்கொலை செய்திருந்த நிலையில் அக் குடும்பத்தினைச் சேர்ந்த தாய் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 4 பேர்   நஞ்சு  குடித்து நேற்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் யாழில் பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உட்பட சிறிய தாயாருக்கும், தனது குடும்பத்தினருக்கும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தானும் மருந்தினைக் குடித்து தனது குழந்தைகளுக்கும் பருக்கித் தாயும் பிள்ளைகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

யாழ்.அரியாலை ஏ.வி.வீதியில் உள்ள வீடொன்றில் இன்று (27.10) வெள்ளிக்கிழமை இந்த தற்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிரிசாந்தன் சுனேந்திரா தாய் மற்றும் அவரது பிள்ளைகளான கிரிசாந்தன் சர்சா(வயது 4) கிரிசாந்தன் சஜித் (வயது 2) கிரிசாந்தன் சரவணா (வயது 2) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கணவர் நகைக்கடை வேலை செய்பவர். அவர் கடந்த ஓகஸ்ட் மாதம் தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலை செய்த குடும்பத்தினர், தமது குடும்ப நண்பர்களுக்கு சிநேகித அடிப்படையில் 1 கோடியே 17 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளனர்.

6 மாத கால தவணையில் மீளத் தருவதாக கூறியிருந்தும் மீளக்கொடுக்கவில்லை. வீட்டிற்கு சென்று கேட்ட போது, காசு வாங்கியவரின் சகோதரனை வெளிநாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
மூத்த சகோதரனிடம் கேட்ட போது, 10 லட்சம் ரூபாய் தானே நான் தர வேண்டும். நீ செய்கிறதை செய்து பார் என பதிலளித்துள்ளனர்.

பணம் பெற்றுக்கொண்டவரின் மனைவியிடம் கேட்ட போது,

நான் பொறுப்பு நின்றதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்றும் இவ்வாறான சம்பவங்கள் நடந்ததன் பின்னர் தான் யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கில் வெல்லமுடியாமல் இருந்த நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி யாழ்.நீதிமன்றில் நடைபெற்ற வழக்கிற்கு சென்று வந்த நிலையில் தான் கணவர் கிரிசாந்தன் தாம் குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயற்சித்த வேளையில், கணவர் முதலில் மருந்தினைக் குடித்துள்ளார்.

கணவர் துடி துடித்ததை கண்டவர் கணவனை காப்பாற்ற முயற்சித்தமையினால் தாம் மருந்தினைக் குடிக்கும் எண்ணத்தினை கைவிட்டுள்ளனர்.

கணவர் இறந்துபோக, அந்த விரக்தியில் இருந்துள்ளனர். அந்த விரக்தியின் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என சிறிய தாயார் தெரிவித்தார்.

இந்த நிலையில், இவர்களும் மீண்டும் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் மிகவும் பாதுகாப்பாக பார்த்து வந்ததாக சிறிய தாயார் கூறினார்.

தாய் மற்றும் 3 பிள்ளைகளும் வீட்டில் தமது அறைக்குள் இருந்துள்ளனர். அறைக்குள் இருப்பதாக எண்ணிய சுனேந்திராவின் தாயார் சற்று நேரத்தின் பின்னர் வந்து பார்த்த போது, சிறு பிள்ளைகளின் வாய்க்குள் இருந்து நுரை மாதிரி வந்த போதே என்ன நுரை வருகின்றதென பார்த்த போதே தற்கொலை செய்துள்ளார்கள் என தெரிந்துகொண்டேன் என உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்தார்.

வீட்டில் இருந்த மேசையின் மீது கடித உறைக்குள் போட்டவாறு 3 கடிதங்களையும் பெற்றோர் எடுத்துள்ளனர்.

அதில் தனது நிலமைகள் குறித்தும் அந்த கடிதத்த்தில் விபரித்துள்ளார். அந்த கடிதங்கள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் அவர்களது சிறிய தாயார் உட்பட தனது பெற்றோருக்குமாக எழுதி வைக்கப்பட்டுள்ளன.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.