மிகப்பெரிய ஆபத்தில் இருந்து டிரைவர்களை காப்பாற்றிய பார்வதி

கேரளாவை சேர்ந்த நடிகை பார்வதி காரில் சென்று கொண்டிருந்த போது மிகப்பெரிய ஆபத்தில் இருந்த டிரைவர்களை காப்பாற்றியிருக்கிறார்.

நடிகை பார்வதி சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சி அருகில் உள்ள பனம்பள்ளி நகர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு மின்சார கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டார்.

இதில் வாகனம் ஏதாவது உரசினால் மிகப்பெரிய ஆபத்தும், உயிர் இழப்பும் ஏற்படும் என்று கருதிய பார்வதி அங்கே தனது காரை நிறுத்தினார். அருகில் இறங்கி நின்று கொண்டு அந்த வழியாக வந்த வாகன டிரைவர்களை எச்சரித்து, அவர்கள் ஓட்டி வந்த வாகனங்களை மின்சார கம்பி அருகில் வராமல் விலகிப் போகும்படி கூறிக்கொண்டிருந்தார்.

இதற்கிடையே மின்சார வாரிய அதிகாரிகளுக்கு மின்கம்பி தாழ்வாக இருப்பது பற்றி தகவல் தெரிவித்தார். மின்சார ஊழியர்கள் வந்து அந்த வயரை சரி செய்த பிறகே பார்வதி அந்த இடத்தில் இருந்து புறப்பட்டார்.

தாங்கள் மட்டுமே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற மனநிலை அதிகரித்து வரும் இந்த கால கட்டத்தில், மற்ற உயிர்களுக்கும் மதிப்பு கொடுத்து பார்வதி செய்த இந்த மனிதாபிமான நடவடிக்கை அவருடைய மதிப்பை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது. முன் எச்சரிக்கையுடன் பல உயிர்களை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்ற காரணமான பார்வதிக்கு பாராட்டுகள் குவிகின்றன.